நதிநீர் இணைப்பு தலைமை செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் EPS இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
- Namvazhvu Tube
- Aug 18, 2020
- 1 min read

நதிநீர் இணைப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதில் பேசிய முதலமைச்சர், ஏற்கனவே கோதாவரி-காவேரி நதி இணைப்பு திட்டத்திலிருந்து 200 டிஎம்சி தண்ணீரை ஒதுக்க கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டார்.
மாநிலத்துக்குள்ளேயே காவேரி-குண்டாறு இணைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு ((National Water Development Agency)) விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ள நிலையில் அதை விரைவாக அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டு கொண்டார்.
காவேரி ஆறு தமிழகத்தின் உயிர்நாடி((life line)) என்றும் , விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் அதிகம் பயன்படுத்தபடுகிறது என்றும் கூறினார். காவேரிக்கு புத்துயிர் அளிக்க நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு 10,700 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்தத் திட்டத்தை கங்கை தூய்மைபடுத்துதல் ((நமாமி கங்கை திட்டம்)) திட்டத்தை போல சிறப்பு திட்டமாக கருத கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக வங்கி நிதியுதவியுடன் 7 மாநிலங்களில் செயல்படுத்தப்படும் அடல் புஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பெண்ணையாறு நெடுகிலும் கர்நாடகா தடுப்பு அணைகளை கட்டி வரும் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 34 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதில் 20 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க 2020-2021ம் ஆண்டில் 2 ஆயிரத்து 265 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். Source: #polimer#polimernews#CMEdappadiPalaniswami#PMNarendraModi#CentralGovt#Cauvery#TNGovt







Comments